திருவண்ணாமலை அரசு பள்ளியில் சட்டமன்ற குழுவினர் ஆய்வு செய்த காட்சி.
நெறிமுறைகளை பின்பற்றாமல் பள்ளிகளை தரம் உயர்த்தியதால் அரசுக்கு கோடிகணக்கான ரூபாய் இழப்பு
- சட்டமன்றபொதுக் கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை பேட்டி
- மாநில விதைப்பண்ணையிலும் ஆய்வு செய்தார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 2021-2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டமன்றபொதுக் கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வில் வேளாண் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சுற்றுலா, பண்பாடு அறநிலையங்கள் துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வளத்துறை ஆகிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு அதற்கான பயன்பாடு குறித்து விரிவான அறிக்கையினை அவர் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. இந்த நெறிமுறைகளை கடந்த ஆட்சி காலத்தில் பின்பற்றாமல் பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளார்கள்.
இதனால் அரசுக்கு கோடிகணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதைபற்றி கூட்டத்தில் விவாதித்து உள்ளோம். அதேபோன்று தற்போது உள்ள பள்ளிகளை தரம் உயர்த்துவது கடந்த காலங்கள் போன்று இல்லாமல் தற்போது உள்ள அரசு வழிகாட்டுதல் முறைப்படி தரம் உயர்த்த வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளோம்.
பெண் கன்றுகளுக்கு சரியான முறையில் தடுப்பூசி போடவில்லை என்று கண்டறியப்பட்டு இனிவரும் காலங்களில் முறையாக தடுப்பூசி போட வேண்டும் என்று கால்நடை துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கின்றன. அவை சரியான முறையில் நிதி ஒதுக்கியும் சரியாக பராமரிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் குறை தெரிவித்து உள்ளனர்.
பத்திரப்பதிவு துறையில் அதிகாரிகள் தெரிவித்த பின்னர் வரி வசூல் செய்யும் நடைமுறை பிற்காலத்தில் இருக்க கூடாது என்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோன்று சிறு விவசாயிகளுக்கு மானியத் தொகையில் டிராக்டர்கள் வழங்கப்படுகிறது.
இந்த டிராக்டர்கள் சம்பந்தப்பட்டவர் 4 ஆண்டுகள் பயன்படுத்த வேண்டும். மானியத்தை வாங்கி டிராக்டர் வாங்கி விட்டு 2 ஆண்டுகளில் டிராக்டர்களை விற்பனை செய்து உள்ளனர். அவர்கள் அந்த மானிய தொகையை அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும். இது குறித்து வேளாண்மை செயலரிடம் கொண்டு செல்ல உள்ளோம்.
அதனை வசூல் செய்யவில்லை என்றால் கிரிமினல் நடைமுறை சட்டத்தின் படி வழக்காக கொண்டு செல்லப்படும். நீர்வளத்துறையில் செங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ள திட்டங்களை பரிந்துரை செய்ய உள்ளோம்.
கழிக்குளம் அரசு பள்ளி சேதமடைந்து உள்ளதால் அதனை செப்பனிட பரிந்துரை செய்து உள்ளோம். திருவண்ணாமலையில் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த போது தமிழகத்திலேயே இல்லாத அளவிற்கு 6, 7 ஆண்டுகளாக 100 சதவீதத்திற்கு மேல் பள்ளிகளில் மாணவிகளை சேர்த்து உள்ளனர்.
இது கல்வி கண்ணை திறந்த காமராஜருக்கு பெருமை தேடி தந்த மாவட்டமாக உள்ளது. பள்ளிக்கல்விதுறையில் திருவண்ணாமலை மாவட்டம் சிறப்பாக உள்ளது என்று இது ஒரு எடுத்துகாட்டாக உள்ளது.
மேலும் பள்ளியில் சேர பல மாணவிகள் விருப்பம் தெரிவித்து உள்ளதால் அந்த பள்ளியில் சிறப்பு நிதியின் மூலம் புதிய கட்டிடங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில் கடல் அளவில் ஊழல் நடைபெற்று உள்ளது. மருந்து, ஆவின் பால், ஸ்மார்ட் சிட்டியில் ஊழல் என எல்லாத்திலும் ஊழல் செய்து உள்ளனர். திட்டமிடாமல் பல திட்டங்களை அவர்கள் செயல்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் திருவண்ணாமலை நகராட்சி மாதிரி பெண்கள் மேநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறை குறித்தும், உணவுப் பொருட்கள் இருப்புவிவரம், இருப்பு பதிவேட்டின் விவரம், வருகை பதிவேட்டின் படி மாணவர்களின் எண்ணிக்கை, மாணவிகளின் கல்வித் தரம் பற்றியும், மாணவியர்களிடம் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் விளக்குகள், மின்விசிறிகள், மின்சார சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளதா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அத்தியந்தல் கிராமத்தில் உள்ள மாநில விதைப்பண்ணையிலும் ஆய்வு செய்தனர்.