தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அரசு பஸ் டிரைவர்
- இரவு 8 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை.
- 2-வது நாளாக தேடும்பணி தீவிரம்
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவன் முருகன் (வயது 45). அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் உமா மகேஸ்வரன் என்பவருடன் அகரம் பள்ளிப்பட்டு வழியாக செல்லக்கூடிய தென்பெண்ணை ஆற்றில் நேற்று மாலை குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தென்பெண்ணை ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் முருகன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உமா மகேஸ்வரன் கத்தி கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முருகனை ஆற்றில் இறங்கி மீட்க முயன்றனர். அதற்குள் அவர் நீண்ட தூரம் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து தண்டராம்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இரவு 8 மணி வரை தேடியும் முருகன் கிடைக்கவில்லை. இன்று 2 வது நாளாக மீண்டும் தேடுதல் பணியை தொடங்கினர். அகரம் பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து மணலூர்பேட்டை வரை ஆற்றில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முருகனுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.