உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை வருவாய் கோட்டத்தில் நூலகங்கள் தரம் உயர்த்தப்படுமா? இளைஞர்கள் எதிர்பார்ப்பு

Published On 2023-04-28 07:06 GMT   |   Update On 2023-04-28 07:06 GMT
  • நூலகங்கள் மேம்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
  • ஐந்தாண்டுகளில் பல அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு படிப்பறிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

உடுமலை :

உடுமலை நகரில் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் மாதிரி நூலகம் ஒன்றும், இரண்டாம் நிலை கிளை நூலகங்கள் இரண்டும் செயல்பட்டு வருகின்றன.உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில் 10க்கும் மேற்பட்ட கிளை நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன.மடத்துக்குளம் தாலுகாவில் மடத்துக்குளத்தில் இரண்டாம் நிலை நூலகமும், கணியூர், கொமரலிங்கம் உட்பட பகுதிகளில் கிளை நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதில் தளி ரோட்டில் இருந்த கிளை நூலகம் மட்டும் மாதிரி நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது. பிற நூலகங்கள் மேம்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், ஐந்தாண்டுகளில் பல அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு படிப்பறிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனால் அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள், அரசு நூலகங்களை மட்டுமே நம்பியுள்ளனர்.ஆனால், இரண்டாம் நிலை நூலகங்களில் போதியளவு புத்தகங்கள் இருப்பதில்லை. குடிமைப்பணிகள் தேர்வுக்கு தயாராக தேவையான, கட்டமைப்பு வசதிகள் எந்த நூலகத்திலும் இல்லை. தனியாக இருக்கை வசதி, கூடுதல் புத்தகங்கள், கழிப்பிட வசதியில்லாததால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் கிராமப்புற இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் உள்ளனர். நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை.போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும். குடிமைப்பணிகள் தேர்வு பிரிவு அனைத்து கிளை நூலகங்களிலும் துவக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

Tags:    

Similar News