டெல்லி சுதந்திர தின விழாவில் பங்கேற்க உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவி தேர்வு
- டெல்லியில் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.
- விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
உடுமலை :
வருகிற 15 ந் தேதி டெல்லியில் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதை யொட்டி அணிவகுப்பை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும் .இந்த சுதந்திர தின விழா அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு உடுமலை ஸ்ரீ. ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படிக்கும் தேசிய மாணவர் படை மாணவி ஆர்.அபர்ணா மற்றும் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளரான இந்த கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியரான தேசிய மாணவர் படை அலுவலர் பி.கற்பகவள்ளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காருண்யா பல்கலைக்கழகத்தில் பயிற்சி முடித்து இன்று கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்படுகின்றனர்.
இவர்கள் இருவரையும் உடுமலை ஸ்ரீ. ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி செயலாளர் சுமதிகிருஷ்ணபிரசாத், இயக்குனர் ஜெ.மஞ்சுளா, முதல்வர் என்.ராஜேஸ்வரி மற்றும் பேராசிரியைகள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.