உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா கடைகள் ஏலம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது

Update: 2023-03-24 05:38 GMT
  • 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.
  • வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.

 உடுமலை :

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் திருவிழா சுற்றுவட்டார கிராமங்களின் திருவிழாவாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.வரும் 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.இதனையடுத்து ஏப்ரல் 4 ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்வுடன் திருவிழா தொடங்குகிறது.விழாவின் உச்ச நிகழ்வான தேர்த்திருவிழா ஏப்ரல் 13 -ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.மேலும் 14 -ந் தேதி இரவு 10 மணிக்கு குட்டை திடலில் வாண வேடிக்கை நடைபெறவுள்ளது.

அத்துடன் திருவிழா நாட்களில் வருவாய்துறைக்கு சொந்தமான 91 சென்ட் பரப்பளவுள்ள குட்டை திடலில் ராட்டினம்,மரணக்கிணறு உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் ஏராளமான கடைகள் அமைக்கப்படும்.இவ்வாறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்கான உரிமம் வழங்கும் வகையில் ஆண்டுதோறும் வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.அந்தவகையில் நடப்பு ஆண்டில் வரும் ஏப்ரல் 7 ந் தேதி முதல் 14ந் தேதி வரை பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்காக குட்டை திடல் ஏலம் வரும் 27 ந் தேதி மதியம் 12 மணிக்கு உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஏலத்துக்காக அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த பட்ச ஏலத்தொகையாக ரூ. 46 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பங்குத்தொகையான ரூ .11 லட்சத்து 50 ஆயிரத்தை அச்சார தொகையாக இன்று காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கேட்பு வரைவோலையாக (டி டி)செலுத்த வேண்டும்.கடந்த ஆண்டில் அரசு நிர்ணயித்த தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி பல முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.நடப்பு ஆண்டில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News