ஜனவரி முதல் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் - நல்லசாமி பேட்டி
- கள் போதை பொருள் தான் என நிரூபிப்போருக்கு தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ரூ.10 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.
- கள்ளுக்கான தடையை நீக்கினால் சுமார் 60 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள்.
பல்லடம்:
தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பல்லடத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக கள் இறக்க தடை தொடர்ந்து இருந்து வருகின்றது. கள் தடையை நீக்கக் கோரி கடந்த 17 ஆண்டுகளாக கள் இயக்கம் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளது.
கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருளோ, மதுவோ அல்ல. அது ஒரு உணவு. அதை இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு. கள் போதை பொருள் தான் என நிரூபிப்போருக்கு தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ரூ.10 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. இதுவரை யாரும் முன் வரவில்லை. கள்ளுக்கான தடையை நீக்கினால் சுமார் 60 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள்.
தமிழ்நாட்டில் கள்ளுகடை திறக்கச் சொல்லவில்லை. எங்களுக்கு கள்ளுக்கான தடையும் வேண்டாம் கள்ளுகடையும் வேண்டாம். இதனை வலியுறுத்தி வரும் ஜனவரி 21ந்தேதி முதல் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடத்தப்படும்.காவிரி பிரச்சனையை பொறுத்த வரையில் கர்நாடகா மீண்டும், மீண்டும் தவறு செய்கின்றது. தமிழகத்தின் பங்கீட்டு தண்ணீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் இறையாண்மை உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.