உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம்.

செயல்படாத அரசாக தி.மு.க., அரசு உள்ளது - உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பேச்சு

Published On 2023-05-30 04:18 GMT   |   Update On 2023-05-30 04:18 GMT
  • கடந்த 2 ஆண்டுகளாக தி.மு.க. அரசு மக்களுக்கு எதுவும் செய்து கொடுக்கவில்லை.
  • சாராயத்தால், போலி மதுபானங்களால் இறப்பு அதிகமாக உள்ளது.

உடுமலை :

உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு திருப்பூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:- கடந்த 2 ஆண்டுகளாக தி.மு.க. அரசு மக்களுக்கு எதுவும் செய்து கொடுக்கவில்லை. 24 மணி நேரமும் பார் திறந்து வைத்துள்ளது. சாராயத்தால், போலி மதுபானங்களால் இறப்பு அதிகமாக உள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறியதால் கொலை, கொள்ளை அதிகரித்து உள்ளது. பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. ஒரு அரசு அமைகிறது என்றால் அது மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். இந்த அரசு மக்களுக்கான இல்லை. அவர்களுக்கு தேவையான கம்பெனிகளை வைத்துக்கொண்டு வீட்டு வசதி நிலைகளை எடுத்து வியாபாரமாக செய்து வருகிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றாத செயல்படாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. எனவே தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைவதற்கு அனைவரும் இரவு பகல் பாராது அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இந்தப்போராட்டத்தில் பல்லடம் எம்.எஸ்.ஆனந்தன் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ.பரமசிவம், உடுமலை நகரச்செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், அன்பர்ராஜன், பிரனேஷ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News