படிக்கட்டில் நின்று மாணவர்கள் பயணம் - நடுவழியில் பஸ்சை நிறுத்திய டிரைவர்
- மாணவர்கள், மாணவிகள் அதிக அளவில் கல்லூரிக்கு செல்ல அந்த பஸ்சில் வந்தனர்.
- படிக்கட்டு வரை கல்லூரி மாணவிகளும் பெண்களும் நின்று கொண்டிருந்தனர்
அனுப்பர்பாளையம் :
திருப்பூரில் இருந்து கோவை செல்லும் தனியார் பஸ் திருமுருகன்பூண்டி பஸ் நிறுத்தத்திற்கு காலை 8 மணிக்கு வந்தது. அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. கல்லூரி மாணவர்கள், மாணவிகள் அதிக அளவில் கல்லூரிக்கு செல்ல அந்த பஸ்சில் வந்தனர். முன்புறத்தில் படிக்கட்டு வரை கல்லூரி மாணவிகளும் பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அப்போது முன்புறம்,பின்பக்கத்திலும் மாணவர்கள் சிலர் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளனர். மேலும் படிக்கட்டில் நின்று சத்தம் போட்டும் கிண்டல் அடித்தும் வந்துள்ளனர். இதனால் பெண்களும் பயணிகளும் முகம் சுழித்தனர்.
பஸ் கண்டக்டர் மாணவர்களிடம் பஸ்சிற்குள் வரச்சொல்லி வலியுறுத்தினார். ஆனால், மாணவர்கள் கேட்காமல் தொடர்ந்து பஸ் படிக்கட்டில் நின்றுகொண்டு கைகளை வெளியே வீசி வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பஸ் டிரைவர் பஸ்சை பூண்டி பஸ் நிறுத்தத்தில் நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி வந்து பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு வந்தால் நான் பஸ்சை எடுக்கமாட்டேன் என்று உறுதிபடகூறி கீழேயே நின்று கொண்டார். மாணவர்களின் இந்த செயல் பயணிகள் -பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே இது போன்ற செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.