உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

திருப்பூர் கார்த்திக்நகரில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-10-15 16:18 IST   |   Update On 2022-10-15 16:18:00 IST
  • கார்த்திக் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
  • சாலை நடுவே மழை நீர் மற்றும் சாக்கடை கழிவுகள் தேக்கமடைந்ததால் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் :

திருப்பூர் 54 வது வார்டு கார்த்திக் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் பலர் வாடகை வீட்டில் தங்கி பனியன் நிறுவனத்திலும், கூலி வேலைக்கும் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று சாலை நடுவே மழை நீர் மற்றும் சாக்கடை கழிவுகள் தேக்கமடைந்ததால் பொதுமக்கள் ஒன்றிணைந்து திடீரென்று சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கார்த்திக் நகரில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையின்நடுவில் தேக்கமடைகிறது. மேலும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் சாலை நடுவில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பேர் உள்ளனர். இச்சாலை வழியாக தினமும் கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மழை நீர் மற்றும் சாக்கடை கழிவுகள் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. தொற்று நோய் பரவும் முன்பாக மாநகராட்சி நிர்வாகம் விரைவாக இப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News