நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்ஸின் காட்சி
நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு பஸ்களால் பரிதவிக்கும் பயணிகள்
- பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசு பஸ்கள் பெரிதும் உதவியாக உள்ளது.
- பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை உரிய முறையில் பராமரிப்பு செய்து சீரான முறையில் கிராமங்கள் தோறும் இயக்குவதற்கு முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.
உடுமலை:
அன்றாட அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உடுமலை கிளை சார்பில் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலமாக பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த சூழலில் அரசு பஸ்கள் பராமரிப்பில் நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக அவை பழுதடைந்து ஆங்காங்கே திடீரென நின்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசு பஸ்கள் பெரிதும் உதவியாக உள்ளது. இதனால் நாள்தோறும் பயனடைந்து வருகின்றோம். ஆனால் உடுமலை கிளையில் அரசு பஸ்கள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் அவை ஓடிக் கொண்டிருக்கும் போதே திடீரென ஆங்காங்கே நின்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் தக்க தருணத்தில் தேவை மற்றும் சேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு அமராவதியை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் கொங்கலக்குறிச்சிக்கு அருகே திடீரென பழுதாகி நின்று விட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் பரிதவித்து போயினர். பின்னர் ஒரு வழியாக நீண்ட நேரத்துக்கு பிறகு மாற்று பஸ் பிடித்து வீடுகளுக்கு சென்றனர். நிர்வாகத்தின் அலட்சியத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அதே போன்று கடந்த சில மாதங்களாக அரசு பஸ்கள் கிராமங்களுக்கு முறையாக இயக்காமல் திடீரென நிறுத்தி விடுகிறார்கள்.
குறிப்பாக பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்த பின்பு தான் பஸ்கள் கிராமங்களுக்கு இயக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறி வேண்டுமென்றே தட்டிக் கழித்து வருகின்றனர்.
இதனால் அரசு மீது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை உரிய முறையில் பராமரிப்பு செய்து சீரான முறையில் கிராமங்கள் தோறும் இயக்குவதற்கு முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.