உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி. 

பெற்றோர்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும் - போலீசார் அறிவுறுத்தல்

Published On 2022-08-18 11:24 GMT   |   Update On 2022-08-18 11:24 GMT
  • போதை பழக்கம் உள்ளவர்கள் நிம்மதி இழந்து காணப்படுவார்கள்.
  • குழந்தைகளின் நடவடிக்கையை அன்றாடம் கண்காணிக்கவேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக இன்று கல்லூரி வளாகத்தில் போதை இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் போதை பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரைராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், போதை பொருட்களை பயன்படுத்தும் போது எண்ணற்ற விளைவுகள் நேரிடும். குடும்பம் சிதைந்து விடும். போதை பழக்கம் உள்ளவர்கள் நிம்மதி இழந்து காணப்படுவார்கள். அதை உட்கொள்வதால் துக்கம் போய் விடும் என்று தவறான கருத்துகள் நிலவுகிறது. உயிரை அழிக்கும் நோய்களும் உருவாகிறது. மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசவேண்டும். அவர்களின் நடவடிக்கையை அன்றாடம் கண்காணிக்கவேண்டும்.போதை பழக்கம் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். வீடு வீடாக சென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி போதை இல்லா தமிழகமாக மாற்ற வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.

பிறகு மாணவ செயலர்கள் சுந்தரம், அருள்குமார், பூபதிராஜா, அரவிந்தன் ஆகியோர் தலைமையில் அலகு - 2 மாணவர்கள் "எக்காரணத்தைக் கொண்டும் போதையில் ஈடுபடமாட்டேன், போதையெனும் சாக்கடையில் விழமாட்டேன், நான் என் குடும்பத்தினரையும், நண்பர்களையும் ஒருபோதும் போதையில் ஈடுபட விடமாட்டேன், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை கண்டறிந்து தக்க ஆலோசனைகளை வழங்குவேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும் அனைவருக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள். ஏராளமான மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் விழிப்புணர்வில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News