பல்லடத்தில் சாலை தடுப்பில் ஆம்னி வேன் மோதி டிரைவர் பலி
- ஆம்னி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்
- கோபிநாத் அவரது மனைவி ராஜலட்சுமி மற்றும், குழந்தைகள் இருவர் உள்ளே அமர்ந்திருந்தனர்
பல்லடம் :
கோவை மாவட்டம் சூலூர் செங்கத்துறை பகுதியைச் சேர்ந்த முருகசாமி என்பவரது மகன் பாலதண்டபாணி (வயது 49). இவர் ஆம்னி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்த நிலையில் இவர் வீட்டருகே வசிக்கும் கோபிநாத் ( 36) என்பவர் குடும்பத்துடன் திருச்சி ஸ்ரீரங்கம் செல்வதற்காக நேற்று அதிகாலை சூலூரில் இருந்து புறப்பட்டனர். ஆம்னி வேனை பாலதண்டபாணி ஓட்ட, கோபிநாத் அவரது மனைவி ராஜலட்சுமி மற்றும், குழந்தைகள் இருவர் உள்ளே அமர்ந்திருந்தனர்.பல்லடம் பனப்பாளையம் பகுதியில் உள்ள கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை சுமார் 3 மணியளவில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஆம்னி வேன் சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கற்களில் மோதியது. இதில் ஆம்னி வேன் மேற்கு திசை நோக்கி திரும்பி சாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் பாலதண்டபாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கோபிநாத்திற்கு பலத்த காயமேற்பட்டது. மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து பல்லடம்போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.