உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2023-05-01 07:43 GMT   |   Update On 2023-05-01 07:43 GMT
  • அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.
  • நேற்று மதியம் அருவியின் நீராதாரங்களில் திடீரென சாரல் மழை பெய்தது.அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

உடுமலை:

உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது.உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை,கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு,பாரப்பட்டியாறு,குருமலைஆறு,கிழவிப்பட்டிஆறு, உப்புமண்ணபட்டிஆறு,பாலாறு,உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர்வரத்தை பெறுகிறது.

வனப்பகுதியில் பல்வேறு பகுதியில் ஓடிவருகின்ற ஆறுகள் பஞ்சலிங்கங்களுக்கு அருகில் ஒன்று சேர்ந்து அருவியாக கொட்டுகிறது. அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு பின்பு அருவியின் நீராதாரங்களில் மழை பெய்யவில்லை.ஆனாலும் ஓரளவுக்கு நீர்வரத்து இருந்து வந்தது.இதையடுத்து சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு உற்சாகத்தோடு வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்த சூழலில் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து குறைந்தது.

இந்த நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த வாரம் திடீரென மழை பெய்தது.இதன் காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.அதைத் தொடர்ந்து கோடை விடுமுறையை கழிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்தோடு குடும்பம் குடும்பமாக அருவியில் குளித்து வந்தனர். இதனால் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கணிசமான அளவில் இருந்து வந்தது.இந்த சூழலில் நேற்று மதியம் அருவியின் நீராதாரங்களில் திடீரென சாரல் மழை பெய்தது.அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

நேற்று பெய்த மழையால் அருவிக்கு சற்று நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குறைவான தண்ணீரில் குளித்து ஏமாற்றம் அடைந்த நிலையில் அருவியில் விழுகின்ற ஆக்ரோஷமான தண்ணீரில் குளித்து மகிழலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.எதிர்பார்த்த அளவு தண்ணீர் வராததால் தடை விலக்கி கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News