கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட குடும்ப தலைவிகள் விண்ணப்பிக்கலாம்
- ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம்கள் இன்று , நாளை (சனிக்கிழமை), நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்களும், முதலாம், 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்ற அதே இடங்களில் நடைபெறுகிறது.
வருவாய்த்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அந்த குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம். இதுதவிர சிறப்பு முகாம்களில் ஏற்கனவே விண்ணப்பபதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வர முடியாத குடும்ப தலைவிகள் இந்த முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.