மழையால் தீபாவளி வியாபாரம் பாதிப்பு - பல்லடம் வியாபாரிகள் கவலை
- பல்லடம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- விசைத்தறி, பனியன், கோழி வளர்ப்பு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது.
பல்லடம் :
பல்லடம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விசைத்தறி, பனியன், கோழி வளர்ப்பு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. இந்த நிலையில், வருடம் தோறும் தீபாவளி பண்டிகை யை முன்னிட்டு சுமார் ஒரு வார காலத்திற்கு பல்லடத்தின் ஒரே கடைவீதியான என்.ஜி. ஆர். ரோடு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், நகைகள் என வாங்குவதற்கு மக்கள் ஆர்வமுடன் கடைவீதியில் கூடுவார்கள். வியாபாரிகளும் தங்களது கடைகள் முன்பு அலங்கார பந்தல்கள் அமைத்து, பொது மக்களை கவரும் வண்ணம் புதிய ஆடைகளை பார்வைக்கு வைத்து வியாபாரம் செய்வார்கள்.
இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை. விசைத்தறி தொழில், பனியன் தொழில்கள் முடங்கிப் போய் உள்ளதாக பேச்சு நிலவுகிறது. கடந்த 2 நாட்களாக திடீர் என மழை பெய்வதால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இன்னும் பல நிறுவனங்களில் போனஸ் வழங்கப்படவில்லை. எனவே கடைசி நேர விற்பனையை எதிர்பார்த்து பல்லடம் வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.