உடுமலையில் தி.மு.க. கொடிக்கம்ப பீடம் இடிப்பு-பரபரப்பு
- கொடியேற்று விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
- கொடிக்கம்பம் நிறுவும் பணி நடைபெற்று வந்தது.
உடுமலை :
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை நகர தி.மு.க. சார்பில் 33 வார்டுகளிலும் கொடியேற்று விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து கிளைகளிலும் கல்வெட்டுடன் கூடிய பீடம் அமைக்கப்பட்டு அதில் கொடிக்கம்பம் நிறுவும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி காந்திசவுக் பகுதியில் கொடிக்கம்ப பீடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவில் கொடி கம்பபீடத்தை இடித்து விட்டனர்.
இதனால் ஆவேசம் அடைந்த தி.மு.க. நிர்வாகிகள் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து உடுமலை நகரச்செயலாளர் வேலுச்சாமி தலைமையில் துணைச்செயலாளர் வக்கீல் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் யு.என்.பி.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி கொடி கம்பபீடத்தை உடைத்தவர்களை தேடி வருகின்றனர்.