பல்லடத்தில் ரூ.2.20 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை
பல்லடம்:
பல்லடத்தில் ரூ.2.20 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். பல்லடம் நகராட்சி தினசரி சந்தை பகுதியில் ரூ.1.61 கோடி மதிப்பில் புதிய கடைகள் கட்டும்பணி, மற்றும் பல்லடம் பஸ் நிலைய பகுதியில் ரூ.59 லட்சம் மதிப்பில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், நகராட்சித் தலைவர் கவிதாமணி முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் விநாயகம் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், திமுக., நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார், நகர் மன்ற உறுப்பினர்கள், திமுக., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.