உள்ளூர் செய்திகள்

தனது பெயரை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி : போலீசில் செல்வராஜ் எம்.எல்.ஏ. புகார்

Published On 2022-12-10 07:04 GMT   |   Update On 2022-12-10 07:04 GMT
  • மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் மனு ஏற்பு ரசீது வழங்கியுள்ளனர்.
  • நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு பெற்றுத்தருகிறேன் என்று கூறி வருகிறார்.

திருப்பூர் :

திருப்பூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிலையில் ரூ.2 லட்சம் கொடுத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தருவதாக, செல்வராஜ் எம்.எல்.ஏ. பெயரை சொல்லி வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் சிவசங்கர் என்பவர் செல்போனில் பேசியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து தெரிய வந்ததும் செல்வராஜ் எம்.எல்.ஏ. அதிர்ச்சி அடைந்தார். சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டபோது செல்போனை எடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து க.செல்வராஜ் எம்.எல்.ஏ. திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் 'சிவசங்கர் என்ற நபர் எனது பெயரை பயன்படுத்தி பணம் பறிக்கும் நோக்கத்தோடு, எனக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு பெற்றுத்தருகிறேன் என்று கூறி வருகிறார். அவரை பிடித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் மனு ஏற்பு ரசீது வழங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News