உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2022-09-01 05:14 GMT   |   Update On 2022-09-01 05:14 GMT
  • மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
  • சிறு தானியங்களின் பயன்பாடு நகர, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது.

உடுமலை :

உடுமலை சுற்றுப்பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கம்பு, தினை, சோளம், கொண்டைக்கடலை உட்பட தானியங்கள் இப்பகுதியிலேயே உற்பத்தியாகி சந்தைகளுக்கு வரத்து சீராக இருந்து வந்தது.பல்வேறு காரணங்களால் தானிய சாகுபடியும் சிறு தானிய உணவுகள் பயன்பாடும் குறைந்தது.

கடந்த சில ஆண்டுகளாக சிறு தானிய உணவுகள் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இதனால் சிறு தானியங்களுக்கான, தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப உற்பத்தி இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இது குறித்து சிறு வியாபாரிகள் கூறியதாவது:- உடல் நலனுக்கு நன்மை தரும், சிறு தானியங்களின் பயன்பாடு நகர, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப தரமான, அதேவேளையில் விலை குறைவாக தானியங்கள் கிடைப்பதில்லை.உடுமலை பகுதியில் இவ்வகை சாகுபடிகள் வெகுவாக குறைந்து விட்டது. முன்பு அறுவடை சீசன் சமயங்களில் நேரடியாக கிராமங்களுக்கு சென்று சிறு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வோம். தற்போது அந்நிலை இல்லை. உள்நாட்டு தேவைக்கு போதுமான அளவு தானியங்கள் கிடைப்பதில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறுகையில், சிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஆர்வமிருந்தாலும் தேவையான விதைகள் கிடைப்பதில்லை.

வேளாண்துறை சார்பில் சிறப்பு திட்டங்களின் கீழ் மானியத்தில் சிறு தானிய விதைகளை வழங்க வேண்டும். பருவமழைகள் கைகொடுத்தால், இவ்வகை தானியங்கள் உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பும் என்றனர்.

Tags:    

Similar News