உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

இரவு நேரத்தில் அமராவதி ஆற்றில் மணல் திருடும் கும்பல்

Published On 2022-08-29 07:09 GMT   |   Update On 2022-08-29 07:09 GMT
  • சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு மண் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
  • அதிகாரிகள் வருவதை அறிந்த கும்பல் டிப்பர் லாரி, பொக்லைன் ஆகியவற்றை விட்டுவிட்டு தப்பியது.

தாராபுரம் :

தாராபுரம் பைபாஸ் ரோட்டில் வீரராகவபெருமாள் கோவில் அருகே அமராவதி ஆற்றையொட்டி உள்ள தனியார், அரசு புறம்போக்கு இடத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு மண் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆர்.டி.ஓ., குமரேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்த, அவர்கள் மண்ணை கொட்டி விட்டு மண் எடுக்கப்பட்ட டிப்பர் லாரி, பொக்லைன் ஆகியவற்றை விட்டு விட்டு கும்பல் தப்பியது.சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 டிப்பர் லாரி, 2 பொக்லைனை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம், தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் இருந்து, மடத்துக்குளம், தாராபுரம், அரவக்குறிச்சி வழியாக காவிரியில் தண்ணீர் கலந்து வருகிறது. இந்த ஆற்றில், காங்கயம், கம்புலியாம்பட்டி, கோவில்பாளையம், மயில்ரங்கம், மணலூர், சங்கரண்டாம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக மணல் திருட்டு இல்லாமல் இருந்தது. கடந்த சில வாரங்களாக அமராவதி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் சென்றது. இதனால் , ஆற்றில் மணல் குவியலாக ஆங்காங்கு பரவியிருந்தது.தற்போது, குறைந்த அளவில் தண்ணீர் வரத்து உள்ளது. இதை மணல் திருடர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு கைவரிசை காட்ட துவங்கியுள்ளனர். வேலப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, மயில்ரங்கத்தில், ஈஸ்வரன் கோவில் அருகே அமராவதி ஆற்றில் இரவு நேரத்தில் மர்ம நபர்களால் மணல் திருட்டு நடந்துள்ளது. எனவே உடனடியாக, மாவட்ட நிர்வாகம், போலீசார் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News