உள்ளூர் செய்திகள்

புதுப்பெண் மயங்கி விழுந்து சாவு

Published On 2022-12-11 14:33 IST   |   Update On 2022-12-11 14:33:00 IST
  • காதல் திருமணம் செய்த நிலையில் பரிதாபம்
  • அதிகாரிகள் விசாரணை

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கூத்தாண்ட குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 25). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலை, புதூர் நாடு ஊராட்சி, பெரும்பள்ளி அடுத்த சின்னவட்டானூர் பகுதியை சேர்ந்த காளி என்பவரின் மகள் சுபாஷினி (வயது 20) என்பவரும் சுரேஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

மேலும் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு சுரேஷ் என்பவரின் வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் சுபாஷினிக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறலால் அவதி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுபாஷினி மயங்கி விழுந்ததுள்ளார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சுபாஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சுபாஷினியின் தாயார் மாரி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருமணமாகி ஒன்றரை மாதமே ஆன நிலையில் இதுகுறித்து திருப்பத்தூர் ஆர்டிஓ லட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News