உள்ளூர் செய்திகள்

கோலத்தி அம்மன் கும்பாபிஷேகம் நடந்தது.

தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கோலத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-06-18 09:43 GMT   |   Update On 2022-06-18 10:34 GMT
  • தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கோலத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • ஈய்யனூர், மகரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தில் கோலத்தி அம்மன் கோவில் உள்ளது. சுமார் 50 ஆண்டுகள் பழமையான இக்கோவில் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவில் புனரமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று கோலத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, தீர்த்த குடம் எடுத்தலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, சூரிய நாராயண பூஜை நிறைவடைந்தது. தொடர்ந்து யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. கடம் கோவிலைச் சுற்றி வந்து கோலத்தி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. மேலும் மூலவர் கோலத்தி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர், அய்யனார், கருப்பையா, சன்னியாசியப்பர் ஆகிய சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஈய்யனூர், மகரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News