குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிணற்றில் குதித்த பெண்கள்
- கட்டிலில் கயிறு கட்டி 80 அடி ஆழத்தில் இருந்து மீட்டனர்
- சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தினர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த புனல்காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் இணைந்து 18 நாட்கள் தொடர்ச்சியாக காத்திருப்பு போராட்டம் உட்பட பல்வேறு நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
18-வது நாள் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க ஊர்வலமாக சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.அப்போது போலீசாருக்கும் மனு அளிக்க சென்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு,கலெக்டர் முருகேஷ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அந்த சமயத்தில் மாற்று இடம் பார்க்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து புனல்காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குப்பை கிடங்கு அமைக்கும் பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் நேற்று போலீசாரின் பாதுகாப்புடன் அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் குப்பை கிடங்கு அமைப்பதற்கான இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை தொடங்கினர்.
இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நிர்மலா குமாரி ஆகிய 2 பெண்கள் திடீரென அங்கிருந்த 80 அடி ஆழ விவசாய கிணற்றில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது உடனே அங்கிருந்து வாலிபர்கள் அவர்களை மீட்க கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கினர்.
பின்னர் 2 கட்டில்களை கட்டி மேலிருந்தவர்கள் கிணற்றுக்குள் இறக்கினார்.கீழே நின்றவர்கள் மீட்கப்பட்ட 2 பெண்களையும் ஒவ்வொருவர்களாக கட்டில் வைத்தனர். அதன் பின் மேலே இருந்தவர்கள் போலீசாருடன் கட்டிலின் 4 மூலைகளிலும் கட்டி இருந்த கயிறுகள் மூலம் கட்டிலை மேலே இழுத்து வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் தயாராக இருந்த ஸ்ட்ரெச்சரில் வைத்து மீட்கப்பட்ட நிர்மலா,குமாரி ஆகிய 2 பெண்களையும் ஆம்புலன்ஸ்க்கு கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து போலீசார் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தினர். எனினும் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.