காயல்பட்டினத்தில் குடிசை வீடுகள் இடிக்கப்பட்டதை தடுத்தவர்களுக்கு கொலை மிரட்டல்- வார்டு கவுன்சிலரின் மகன் உள்பட 3 பேர் மீது வழக்கு
- செல்வகுமார், முருகன், ஆனந்த் ஆகியோருடன் சென்று குடிசைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
- ஜெயக்குமார் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் நகராட்சியில் 1- வது வார்டில் உச்சினி மாகாளியம்மன் கோவில் தெரு உள்ளது. இங்கு சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்கு பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இங்குள்ளவர்களில் பலர் அருகில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் சுமார் 300 குடிசைகளை அமைத்திருந்தனர். ஆனால் இது ஆக்கிரமிப்பு எனவும் புகார் எழுந்தது.இந்த நிலையில் அப்பகுதியின் வார்டு கவுன்சிலர் மாரீஸ்வரி என்பவரின் மகனான செல்வகுமார் தனது நண்பர்களான முருகன், ஆனந்த் ஆகியோருடன் சென்று ஜே.சி.பி எந்திரத்தின் மூலம் நேற்று முன்தினம் அங்குள்ள குடிசைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த நடவடிக்கையை கண்டித்து அப்பகுதி மக்கள் கூடினர். பள்ளிக்கூடம் அருகில் குப்பையை கொட்ட கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செல்வகுமார், நான் இப்பகுதி கவுன்சிலர். குப்பைகளை கொட்டுவதற்காக இந்த இடத்தை சரி செய்து கொண்டிருக்கிறேன். இதை யாரும் தடுக்க முடியாது. மீறினால் அவர்களின் அடிப்படை உரிமைகளை ரத்து செய்துவிடுவேன். இதற்கு மேலும் பேசினால் கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி ஊர் நல கமிட்டி பொறுப்பாளரான ஜெயக்குமார் நேற்று ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.இதன் பேரில் செல்வகுமார், முருகன், ஆனந்த் ஆகிய 3பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.