உள்ளூர் செய்திகள்

பள்ளம் இருப்பதை சுட்டிக்காட்ட எச்சரிக்கை பலகைக்கு பதில் கம்பில் சுற்றி வைக்கப்பட்டுள்ள சாக்குப்பையை படத்தில் காணலாம்


பாவூர்சத்திரத்தில் நெல்லை- தென்காசி நான்கு வழி சாலையில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்

Published On 2023-02-01 12:57 IST   |   Update On 2023-02-01 12:57:00 IST
  • பாவூர்சத்திரத்தில் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
  • எச்சரிக்கை பலகைக்கு பதில் கம்பில் சாக்கு பையை சுற்றி நட்டு வைத்துள்ளனர்.

தென்காசி:

நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பாவூர்சத்திரத்தில் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே முப்புடாதி அம்மன் கோவில் முன்பு பழைய சந்தைக்கு செல்லும் பாதையில் நான்கு வழி சாலை ஓரத்தில் குடிநீர் பைப்புகள் பதிக்கும் பணி நடைபெற்று முடிந்த நிலையில் அங்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தை முழுமையாக மூடாமல் பெயரளவிற்கு சரி செய்து மேடு பள்ளமாக காட்சியளிக்கும் வண்ணம் விட்டுச் சென்றுள்ளனர்.

மேலும் அவ்வழியே வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்கு எச்சரிக்கை பலகையை வைப்பதற்கு பதில் கம்பில் சாக்கு பையை சுற்றி நட்டு வைத்துள்ளனர்.

நெல்லை- தென்காசி சாலையில் வாகனங்கள் அதிகம் பயணிப்பதால் பெரும் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பாக முறையான எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் அல்லது பள்ளத்தை சீர் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News