உள்ளூர் செய்திகள்

கணவருடன் கொள்ளையடிக்க வந்த பெண் சிக்கினார்

Published On 2023-01-30 09:19 GMT   |   Update On 2023-01-30 09:19 GMT
  • பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
  • ராஜேஷ்குமார். வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள பெற்றோரை பார்க்க சென்றார்.

கோவை,

கோவை மதுக்கரை அருகே உள்ள போடிபாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். ஐ.டி. ஊழியர். கடந்த 27-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள பெற்றோரை பார்க்க சென்றார்.

நேற்று இரவு 11 மணியளவில் ஒரு தம்பதி ெமாபட்டில் ராஜேஷ்குமாரின் வீட்டு முன்பு வந்தனர். அவர்கள் மொபட்டை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டனர்.

பொதுமக்கள் வருவதை பார்த்த தம்பதி 2 பேரும் தப்பி ஓடினர். அப்போது பெண் மட்டும் பொதுமக்களின் கையில் சிக்கி கொண்டார். அவருடன் வந்த ஆண் தப்பி ஓடி விட்டார். பின்னர் பொதுமக்கள் கொள்ளையடிக்க முயன்ற பெண்ணை மதுக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்த தேவி என்ற துர்கா தேவி (வயது 28) என்பது தெரிய வந்தது. தப்பி ஓடியவர் அவரது கணவர் பிரகாஷ் (31) என்பது தெரிய வந்தது. தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News