உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்கள் சாப்பிட மறுத்து போராட்டம்- குடிநீர், கழிப்பிட வசதி இல்லை என குற்றச்சாட்டு

Published On 2023-10-05 09:33 GMT   |   Update On 2023-10-05 09:33 GMT
  • மயிலாப்பூர் நாகேஸ்வர பூங்கா அருகே உள்ள சமுதாய கூடத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 300 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
  • புதுப்பேட்டை சமுதாய கூடத்திலும் தண்ணீர் வசதி இல்லை என ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சென்னை:

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சென்னையில் பல்வேறு சமுதாய கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

மயிலாப்பூர் நாகேஸ்வர பூங்கா அருகே உள்ள சமுதாய கூடத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 300 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு கழிவறையில் தண்ணீர் வரவில்லை. குடிப்பதற்கு குடிநீர் இல்லை என ஆசிரியர்கள் மனம் குமுறினர்.

இதுபற்றி மாநில துணை செயலாளர் வேல்முருகன் கூறியதாவது:-

அதிகாலையில் கைது செய்து இங்கு அழைத்து வந்தனர். பெண்கள் கைக் குழந்தைகள் உள்ள நிலையில் அடிப்படை வசதிகள் கூட இங்கில்லை. கழிவறையில் தண்ணீர் இல்லை.

பெண்கள் கழிவறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆசிரியர்களை தரம் தாழ்த்தி வழிநடத்துகின்றனர். நாங்கள் உணவு கேட்கவில்லை. 300 பேர் உள்ள இடத்தில் 30 பேருக்கு மட்டும் உணவு கொடுத்தால் எப்படி? அதனால் தான் நாங்கள் யாரும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறோம்.

குழந்தைகளுக்கு மட்டும் பிஸ்கெட் வாங்கி கொடுத்தோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இந்த சமுதாய கூடத்திலும் 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல புதுப்பேட்டை சமுதாய கூடத்திலும் தண்ணீர் வசதி இல்லை என ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News