உள்ளூர் செய்திகள்

கரடு, முரடான சாலையை சீரமைக்க வேண்டும்

Published On 2022-07-23 09:58 GMT   |   Update On 2022-07-23 09:58 GMT
  • ஏலமன்னா-பந்தலூர் இடையே உள்ள சாலை ஏற்கனவே குண்டும், குழியுமாக காணப்பட்டது.
  • பழங்குடியின மக்கள், பொதுமக்கள் ரேஷன் கடைகளில் வாங்கும் அத்தியாவசிய பொருட்களை தலையில் சுமந்தவாறு நடந்து செல்கிறார்கள்.

ஊட்டி:

பந்தலூர் அருகே ஏலமன்னாவில் இருந்து ேமங்கோரேஞ்ச் வழியாக பந்தலூருக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான தனியார் வாகனங்கள், பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், ஆட்டோக்கள் சென்று வருகின்றன.

ஏலமன்னா-பந்தலூர் இடையே உள்ள சாலை ஏற்கனவே குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை சீரமைக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் சாலை மீண்டும் பழுதடைய தொடங்கியது. மேலும் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் சென்றால், சாலை குண்டும், குழியுமாக மாறியது. இதனால் கற்கள் பெயர்ந்து கரடு முரடாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அவசர சிகிக்சைக்கு நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. பழுதடைந்த சாலையில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

மேலும் காட்டு யானைகள் நடமாட்டம் சாலையில் உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, சாலை பழுதடைந்து உள்ளதால், ஏலமன்னா அரசு உண்டு உறைவிட பள்ளிக்கு அரிசி, காய்கறிகளை ஏற்றி செல்லும் சரக்கு வாகனம் செல்ல முடியவில்லை. இதனால் சுமந்தபடி கொண்டு செல்கின்றனர்.

பழங்குடியின மக்கள், பொதுமக்கள் ரேஷன் கடைகளில் வாங்கும் அத்தியாவசிய பொருட்களை தலையில் சுமந்தவாறு நடந்து செல்கிறார்கள். அந்த சமயத்தில் காட்டு யானைகள் விரட்டும் போது, சிலர் தவறி விழுந்து காயமடைகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் சாலை அடித்து செல்லப்பட்டு, கால்வாய் போல் காணப்படுகிறது. எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News