உள்ளூர் செய்திகள்

ஆலாந்துறை அருகே டீ குடிப்பது போல் நடித்து பணம் திருடிய வாலிபர்கள்

Published On 2023-07-28 09:29 GMT   |   Update On 2023-07-28 09:29 GMT
  • பணத்தை கல்லா பெட்டியில் வைத்து விட்டு செல்லுமாறு கடைக்காரர் வாலிபர்களிடம் கூறினார்.
  • பணத்தை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை,

கோவை அருகே உள்ள பூலுவபட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 54). இவர் சிறுவாணி மெயின் ரோட்டில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.

தினசரி இவர் அதிகாலை 2 மணிக்கு டீ கடையை திறப்பது வழக்கம். இதேபோல சம்பவத்தன்று கடையை திறந்து வேலைகளை செய்து கொண்டு இருந்தார். 3 மணியளவில் 3 வாலிபர்கள் டீ குடிப்பதற்காக வந்தனர். அவர்களுக்கு மாரியப்பன் டீ போட்டு கொடுத்தார். பின்னர் போண்டா போட்டு கொண்டு இருந்தார்.

டீ யை குடித்த 3 பேர் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என கேட்டனர். அதற்கு மாரியப்பன் ரூ.30 என்றார். அப்போது அவர் போண்டா போட்டு கொண்டு இருந்ததால் பணத்தை நீங்களே கல்லா பெட்டியில் வைத்து விட்டு செல்லுமாறு கூறினார்.

அவர்கள் சென்ற பின்னர் மாரியப்பன் பார்த்த போது அந்த 3 பேரும் கல்லா பெட்டியில் பொருட்கள் வாங்குவதற்காக வைத்து இருந்த ரூ.37,500 பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து அவர் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டீ குடிப்பது போல நடித்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.37,500 பணத்தை திருடிச் சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News