உள்ளூர் செய்திகள்

ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்.

விபத்தில் வாலிபர் பலி: நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி-கடலூர் கோர்ட்டு நடவடிக்கை

Published On 2022-08-30 07:10 GMT   |   Update On 2022-08-30 07:10 GMT
  • பெரியகங்கணாங்குப்பம் சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ், கார் மீது மோதியது.
  • வக்கீல்கள் ராம.ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் ஆகியோர் மூலம் வழக்கு தொடர்ந்தார்.

கடலூர்:

குறிஞ்சிப்பாடி அருகே வடக்குத்து காந்திநகர் விரிவு அண்ணாராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் அஜய்குமார் (வயது 20). இவர் கடந்த 13.12.2013 அன்று கடலூர் வழியாக புதுச்சேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவர் பெரியகங்கணாங்குப்பம் சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ், கார் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து புதுச்சேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அஜய்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பற்றி ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த விபத்து வழக்கில் நஷ்டஈடு கேட்டு அவரது தாய் விஜயா கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வக்கீல்கள் ராம.ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் ஆகியோர் மூலம் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அஜய்குமார் தாயாருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் வட்டி மற்றும் செலவு தொகையுடன் சேர்த்து ரூ.14 லட்சம் வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதையடுத்து மீண்டும் ரூ.20 லட்சத்து 97 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்–பட்டது. அந்த தொகையும் வழங்கப்படாததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் நேற்று கடலூரில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். 

Tags:    

Similar News