கோவை மத்திய சிறை முன்பு 1 கிலோ கஞ்சா பறிமுதல்
- தர்மபுரி வாலிபர் கைது
- ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை
கோவை,
கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சிறைக்குள் தடைசெய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா? என போலீசார் அடிக்கடி ஆய்வு செய்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று சிறையின் நுழைவுவாயில் அருகே சந்தேகம்படும்படி நின்றிருந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
எனவே போலீசார் அவரை சோதனை செய்து பார்த்தனர். இதில் அவர் ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக வந்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து மத்திய சிறை ஜெயிலர் சிவராஜன், ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த கூலிதொழிலாளி கிரி(வயது 19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.