உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் 11-வது நாளாக தேயிலை விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்

Published On 2023-09-11 10:18 GMT   |   Update On 2023-09-11 10:21 GMT
  • ஊர்வலமாக புறப்பட்டு சென்று எத்தையம்மன் கோவிலில் வழிபாடு
  • தேயிலை வர்த்தகர்களை உடனடியாக இணைக்க வாரிய அதிகாரி உறுதி

அரவேணு,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரியும், தேயிலை வாரியம் உடனடியாக 30-ஏ சட்டத்தை அமல்படுத்த கோரியும் அங்கு உள்ள விவசாயிகள் கடந்த 1-ந்தேதி முதல் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இது 11-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில் நேற்று 10-வது நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பேரகணி, தாந்தநாடு, புடியங்கி , கன்னேரிமுக்கு, அளியூர், ஒடேன், உல்லத்தட்டி ஆகிய, கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக விவசாயிகள் அந்தந்த கிராமங்களில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு குலதெய்வம் எத்தையம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் அம்மனை மனமுருக வழிபட்டனர். பின்னர் மீண்டும் பேரணியாக வந்திருந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நீலகிரி தேயிலை விவசாயிகளின் உண்ணா விரத போராட்டத்திற்கு வந்திருந்த தேயிலை வாரிய உறுப்பினர் ராஜேஷ்சந்தர் பேசுகையில், தேயிலை தொழிற்சாலைகள் சட்டம் 30 ஏ பிரிவில் தற்போது தேயிலை விவசாயிகள் இணைக்கப்பட்டு உள்ளனர். மேலும் தேயிலை வர்த்தகர்களை உடனடியாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதேபோல ஊட்டியில் உள்ள குருத்துளி, தங்காடு ஆகிய பகுதிகளிலும் தேயிலை விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தேயிலை பறிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News