சூலூரில் வளர்ப்பு நாயை அடித்து கொன்ற வாலிபர் கைது
- இறந்த நாய்க்கு சூலூர் கால்நடை மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனை நடத்தப்பட்டது.
- விபீஷ் வளர்ப்பு நாயை அடித்து கொன்றது தெரிய வந்தது.
சூலூர்:
சூலூர் ரங்கநாதபுரம் செங்காளியப்பன் நகரை சேர்ந்தவர் விபீஷ் (வயது 35). கேரளாவை சேர்ந்த இவர் தனது சகோதரி ராஜகிருஷ்ணகுமாரி வீட்டில் தங்கி, அங்கு உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ராஜகிருஷ்ண குமாரிக்கு மகள், மகன் உள்ளனர்.
இந்த நிலையில் அவது மகன் ரஜத்தை வளர்ப்பு நாய் கடித்து உள்ளது. எனவே விபீஷ் அதனை பிடித்து சென்று மொட்டை மாடியில் கட்டினார். அப்போது அவரையும் அந்த நாய் கடித்தது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த விபீஷ் அருகில் இருந்த கட்டையை எடுத்து நாயை கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த நாய் இறந்து விட்டது.
இந்த தகவல், புளூகிராஸ் அமைப்புக்கு தெரியவந்தது. அந்த அமைப்பின் கோவை திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், இதுகுறித்து சூலூர் போலீஸ் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக இறந்த நாய்க்கு சூலூர் கால்நடை மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் விபீஷ் வளர்ப்பு நாயை அடித்து கொன்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.