உள்ளூர் செய்திகள்

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2022-07-10 04:28 GMT   |   Update On 2022-07-10 04:28 GMT
  • மாயமான சிறுமியை அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
  • சிறுமியை கோவைபட்டனம்புதூரை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த பாலையம்பட்டி பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். பிளஸ்-1 படித்து முடித்துள்ள அவர் டைப்ரைட்டிங் வகுப்பிற்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று டைப்ரைட்டிங் வகுப்புக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவர் மாயமானது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மாயமான சிறுமியை அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிறுமியை கோவைபட்டனம்புதூரை சேர்ந்த அருண்பாண்டியன் (வயது 22) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்துவரும் அருண்பாண்டியன், வேலை விஷயமாக பாலையம்பட்டி வந்திருந்தபோது அந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பழக்கத்தில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவை சென்றனர். அங்கு வாலிபர் அருண்பாண்டியன், சிறுமியை திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். சிறுமியை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News