உள்ளூர் செய்திகள்
கீழ்பவானி வாய்க்காலில் தீயணைப்புத்துறையினர் விஜயலட்சுமியின் 2-வது மகள் தருணிகாவை தேடி வருகின்றனர்.

2 மகள்களுடன் வீட்டை விட்டு வெளியேறி கீழ்பவானி வாய்க்காலில் குதித்து இளம்பெண் தற்கொலை

Published On 2022-08-21 06:59 GMT   |   Update On 2022-08-21 06:59 GMT
  • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குடும்பதகராறு காரணமாக நல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் தனது 2 மகன்களை வாய்க்காலில் தள்ளி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
  • மீண்டும் அதே போல் குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக். இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக இவர் வீட்டில் இருந்து கொண்டே வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (37). இவர்களுக்கு மதுநிஷா (12), தருணிகா(6) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் விஜயலட்சுமி அவரது அண்ணன் ராமசாமிக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ அனுப்பினார். அதில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. மகள்களை விட்டு செல்ல விருப்பமில்லை. மன்னிச்சிடுங்க என்று தெரிவித்து இருந்தார். இதை அடுத்து விஜயலட்சுமி தனது 2 மகள்களையும் மொபட்டில் அழைத்துக் கொண்டு சென்றார். பின்னர் குருமந்தூர் அருகே உள்ள சுட்டிக்கல் என்ற பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் மொபட்டை நிறுத்திவிட்டு தனது 2 குழந்தைகளை கீழ்பவானி வாய்க்காலில் வீசிவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றார்.

விஜயலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்களை தேடினர். அப்போது கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் மொபட் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து உறவினர்கள் வாய்க்காலில் அவர்களை தேடினர். அப்போது அவர்கள் குதித்த இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆயிபாளையம் என்ற பகுதியில் விஜயலட்சுமியின் மூத்த மகள் மதுநிஷா கரையோரம் உள்ள மரத்தை பிடித்துக் கொண்டு அழுது கொண்டு இருந்தார். அவரை உறவினர்கள் பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து நம்பியூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கீழ்பவானி வாய்க்காலில் தாய் மற்றும் மற்றொரு மகளை தேடினர்.

அப்போது அவர்கள் குதித்த இடத்தில் இருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைக்காரன்கோவில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் விஜயலட்சுமி பிணமாக மீட்கப்பட்டார்.

தொடர்ந்து அவரது 2-வது மகள் தருணிகாவை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குடும்பதகராறு காரணமாக நல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் தனது 2 மகன்களை வாய்க்காலில் தள்ளி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மீண்டும் அதே போல் குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News