உள்ளூர் செய்திகள்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: திருப்பூரில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

Published On 2023-09-10 05:46 GMT   |   Update On 2023-09-10 05:46 GMT
  • காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஜி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.
  • தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் விஜி (வயது 20). இவர் தனது தாய் மற்றும் தங்கை ஆகியோருடன் திருப்பூர்-மங்கலம் சாலை பாரப்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். மேலும் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்துள்ளார்.

இவர் கடந்த ஒரு ஆண்டாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய காதல் விவகாரம் விஜியின் தாயாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த விஜி கடந்த 7-ந்தேதி பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரது தாயார் திருப்பூர் மத்திய போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜியை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் பாராபாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விஜி பிணமாக கிடந்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் திருப்பூர் தெற்கு தீயணைப்புத்துறையினர் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஜி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News