உள்ளூர் செய்திகள்

மதுபோதையில் கணவர் சித்ரவதை- காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2023-05-25 12:55 IST   |   Update On 2023-05-25 12:55:00 IST
  • மது அருந்தி விட்டு வந்த கணேசனுக்கும் அவரது மனைவிக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.
  • மனைவியுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற கணேசன் , பின்னர் மனைவிக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.

திருப்பூர்:

புதுக்கோட்டை மாவட்டம் மாரப்பூர் மேலபுலவன் காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 30). இவர் திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அதே நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்த வசந்தாமணி (23) என்ற பெண்ணை கணேசன் காதலித்து வந்தார்.

2 பேரும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு 15 வேலம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் கணேசன் தினமும் குடித்து விட்டு வந்து வசந்தாமணியை அடித்து சித்ரவதை செய்துள்ளார்.

நேற்று இரவும் மது அருந்தி விட்டு வந்த கணேசனுக்கும் அவரது மனைவிக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மனைவியுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற கணேசன் , பின்னர் மனைவிக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு வசந்தாமணி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வசந்தாமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News