உள்ளூர் செய்திகள்

வானூர் அருகே தனியார் பஸ் கார் மீது மோதி விபத்து- புதுவை ஒப்பந்ததாரர் பலி

Published On 2023-07-10 10:33 IST   |   Update On 2023-07-10 10:33:00 IST
  • விபத்தில் சிக்கிய கார், மோட்டார் சைக்கிள்கள் அப்பளம் போல நொறுங்கியது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வானூர்:

திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி தனியார் பஸ் நேற்று இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இரவு 8.30 மணியளவில் வானூர் அடுத்த மொரட்டாண்டி அருகே வந்த போது, திடீரென சாலையின் குறுக்கே மாடு வந்தது. தனியார் பஸ் மாடு மீது மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரும்பை கிராமத்தை சேர்ந்த சத்யா (35), காரில் வந்த சத்தியமூர்த்தி (42), அவரது மனைவி வனிதா (37) ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும், விபத்தில் மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

விபத்தில் சிக்கிய கார், மோட்டார் சைக்கிள்கள் அப்பளம் போல நொறுங்கியது. அவ்வழியே சென்றவர்கள், விபத்துக்குள்ளான 3 பேரையும் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சத்தியமூர்த்தி இறந்து போனார். இவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகளில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது மனைவி வனிதா, மோட்டார் சைக்கிளில் வந்த சத்யா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News