உள்ளூர் செய்திகள்

வானகரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி பலி

Published On 2022-07-03 10:54 GMT   |   Update On 2022-07-03 10:54 GMT
  • ஆவடியை அடுத்த அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். சாப்ட்வேர் என்ஜினீயர்.
  • சுகுமார், தனது மகள் ரம்யாவுடன் மோட்டார் சைக்கிளில் வானகரம் நோக்கி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

ஆவடியை அடுத்த அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மகள் ரம்யா (வயது10). திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

சுகுமார், தனது மகள் ரம்யாவுடன் மோட்டார் சைக்கிளில் வானகரம் நோக்கி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சுகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது உரசியது.

இதில் நிலை தடுமாறிய சுகுமார், மகள் ரம்யாவுடன் மோட்டார் சைக்கிளோடு சாலையில் கீழே விழுந்தார். இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய சிறுமி ரம்யா, தந்தையின் கண் முன்பே சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சுகுமார் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கோயம்பேடு போக்கு வரத்து போலிசார் சிறுமி ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவரான திருவேற்காடு பகுதியை சேர்ந்த பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரவாயல் பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் அம்பத்தூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென பழுதானது. இதையடுத்து கண்டெய்னர் லாரியை டிரைவர் சாலை ஓரமாக நிறுத்தி வைத்தார்.

அப்போது அவ்வழியாக இரும்பு காயில்கள் ஏற்றிக் கொண்டு வந்த 24 டயர் கொண்ட "டாரஸ்" லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலை யோரம் நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதி தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 2 லாரி டிரைவர்கள், கிளீனர் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்து காரணமாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போக்கு வரத்து போலீசார் விபத்தில் சிக்கி கவிழ்ந்த லாரி மற்றும் அதில் இருந்து கீழே சரிந்த இரும்பு காயில்களை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags:    

Similar News