சரியான முடிவை எடுக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்- டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேச்சு
- பள்ளிப் பருவத்திலே மாணவர்கள் அன்பாகவும், இனிமையாகவும் மற்றவர்களுடன் பேச கற்றுக்கொள்ள வேண்டும்.
- கடினமான விஷயங்களை இனிமையாக அடுத்தவர்களுக்கு கூற வேண்டும்.
வேலூர்:
வி.ஐ.டி. பல்கலைக்கழக குழுமத்தின் அங்கமான வேலூர் சர்வதேச பள்ளி, சென்னையை அடுத்த கேளம்பாக்கம், காயார் பகுதியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
வேலூர் சர்வதேச பள்ளியின் முதலாம் ஆண்டு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
ஆண்டு விழாவிற்கு இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பள்ளிப் பருவத்திலே குழந்தைகள் சகிப்புத்தன்மை, அனுதாபம், சரியான முடிவு எடுத்தல், மனிதநேயம், மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் மற்றும் பணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது சரியாக கவனிக்க வேண்டும்.
கால இடைவேளையில் பாடங்களை திரும்பத்திரும்ப படிக்க வேண்டும். வகுப்பறையில் கவனமாக இருந்தால் தேர்வை கண்டு குழந்தைகள் பயப்பட தேவையில்லை. நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் தேர்வில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம்.
பள்ளிப் பருவத்திலே மாணவர்கள் அன்பாகவும், இனிமையாகவும் மற்றவர்களுடன் பேச கற்றுக்கொள்ள வேண்டும். கடினமான விஷயங்களை இனிமையாக அடுத்தவர்களுக்கு கூற வேண்டும். முடியாது என்பதை கூட இனிமையான முறையில் கூற மாணவர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.
பள்ளிப்பருவத்திலே மாணவர்கள் சரியான முடிவை எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்வில் பல்வேறு கடினமான சூழ்நிலையை நாம் சந்திக்க நேரிடும், அவ்வாறு இன்னல்களை நாம் சந்திக்கும்போது சரியான முடிவை தகுந்த நேரத்தில் எடுக்கும்போது நாம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்வோம். இவ்வாறு முடிவு எடுக்கும் திறனை மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேலூர் சர்வதேச பள்ளியின் தலைவரும் வி.ஐ.டி. துணைத்தலைவருமான ஜி.வி. செல்வம் ஆண்டு விழாவை தலைமையேற்று நடத்தி பேசுகையில்:-
வேலூர் சர்வதேச பள்ளியின் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளி குழந்தைகளை நாட்டின் சிறந்த குடிமகனாக வளர கடினமாக உழைக்கிறார்கள்.
அதே நேரத்தில் நல்லொழுக்கம், நற்பண்பு மற்றும் நல்ல குணங்களோடு மாணவர்கள் வளர ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். நற்பண்பு என்பது நாம் கற்கும் கல்விக்கு ஈடானது.
6 வருட கடின முயற்சிக்குப் பின்பு அனைத்து அம்சங்களுடன் வேலூர் சர்வதேச பள்ளி உருவானது. பல்வேறு நாடுகளுக்கு சென்று பல்வேறு பள்ளிகளை பார்வையிட்ட பிறகுதான் வேலூர் சர்வதேச பள்ளி உருவாக்கப்பட்டது.
வேலூர் சர்வதேச பள்ளி இயற்கையோடு படிக்கும் சூழலாக குழந்தைகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலை மற்றும் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பரிசுகளை வழங்கினார். விழாவில் பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர் அனுஷா செல்வம், பள்ளியின் இயக்குனர் சஞ்சீவி, ஆலோசகர் சீனிவாசன், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.