ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
- ஊட்டியில் கடந்த சில தினங்களாகவே சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது.
- ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே படகு இல்லம் அமைந்துள்ளது.
ஊட்டி:
சமவெளி பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டு விட்டதால் மக்கள் குளுமையான பகுதியான ஊட்டி, கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
ஊட்டியில் கடந்த சில தினங்களாகவே சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது. அவர்கள் அங்குள்ள இதமான கால நிலையை அனுபவித்து வருகிறார்கள்.
மேலும் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது. அவர்கள் அங்குள்ள மலர்களையும், இயற்கை அழிகனையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே படகு இல்லம் அமைந்துள்ளது. இந்த படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. படகு சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்தனர்.
பின்னர் அங்குள்ள ஏரியில் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக படகு சவாரி செய்தனர். அப்போது ஏரியின் அழகையும், அங்குள்ள நிலவிய சீதோஷ்ண நிலையை அனுபவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் அங்குள்ள ஐ லவ் ஊட்டி முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தையொட்டிய கடை வீதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாகவே காணப்பட்டது.
இதேபோல் பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பார்க் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டி சாலைகளில் வாகன போக்குவரத்தும் அதிகரித்து காணப்பட்டது. சில இடங்களில் நெரிசலும் ஏற்பட்டது.