உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க.வில் விருப்ப மனு பெற கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2024-03-01 11:56 GMT   |   Update On 2024-03-01 12:33 GMT
  • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்பமனு அளித்து வருகின்றனர்.
  • 2 நாட்களாக 100-க்கும் மேலானவர்கள் ஆர்வத்துடன் மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க.வை கழற்றி விட்டு விட்டு தனி அணியாக போட்டியிட திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் கடந்த 21-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்பமனு அளித்து வருகின்றனர். 2 நாட்களாக 100-க்கும் மேலானவர்கள் ஆர்வத்துடன் மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

இன்று காலையில் இருந்து தலைமை கழகத்தில் தொண்டர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. விண்ணப்பப் படிவங்களை வாங்கவும், சமர்ப்பிக்கவும் வரிசையில் நின்றனர்.

காலை நிலவரப்படி 1,500 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்து இருந்தனர். விருப்ப மனுவுடன் வேட்பாளர் கட்டணமாக ரூ.20 ஆயிரம் செலுத்துவதால் இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் பெறப்பட்டதாக தெரிகிறது. தலைமை கழக நிர்வாகிகள் விருப்ப மனுக்களை தொகுதிகள் வாரியாக பிரித்து ஒழுங்கு செய்கிறார்கள்.

சென்னையில் இருந்து இன்று ஏராளமான நிர்வாகிகள் விருப்பமனு கொடுத்தனர். அ.தி.மு.க.வுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைக்கிறது என்பது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் விருப்ப மனுக்களை கொடுப்பதில் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.

இந்நிலையில், விருப்ப மனு பெறும் கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6-ம் தேதி வரை நீட்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News