உள்ளூர் செய்திகள்

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி

Published On 2023-03-05 04:24 GMT   |   Update On 2023-03-05 05:01 GMT
  • தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம்.
  • தமிழக மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள்.

சென்னை:

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வந்தது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு வந்ததும் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படும் தகவல் உண்மையா? இல்லையா? என்பதை கண்டறிய பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 8 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் நேற்று சென்னை வந்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர்.

இன்று கோவை, திருப்பூர் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என்பதை அறிந்து கொண்டனர்.

இப்போது இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது.

இவ்வாறு ஆளுநர் பதிவிட்டுள்ளார்.

தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் இதை வெளியிட்டு உள்ளார்.

Tags:    

Similar News