உள்ளூர் செய்திகள்

வீட்டு முன்பு செருப்பை வைக்கும் தகராறில் 2-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு இளம்பெண் கொலை

Published On 2023-07-09 08:49 GMT   |   Update On 2023-07-09 08:49 GMT
  • புஷ்பகாந்தன், அவரது மனைவி வசந்தி ஆகியோருக்கும் குமாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
  • வீட்டு முன்பு செருப்பு வைத்த தகராறில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவொற்றியூர்:

திருவொற்றியூர், தியாகராஜபுரம், 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புஷ்பகாந்தன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தி(வயது40). இவர்கள் 2-வது மாடியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

வசந்தி வீட்டு வாசல் முன்பு அட்டை பெட்டியில் செருப்புகளை வைப்பது வழக்கம். இதற்கு எதிர்வீட்டில் வசித்து வரும் குமார் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வசந்தி, வீட்டு வாசலில் அட்டை பெட்டியில் செருப்புகளை போட்டு வைத்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமார் தகராறில் ஈடுபட்டார். இதனால் புஷ்பகாந்தன், அவரது மனைவி வசந்தி ஆகியோருக்கும் குமாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது குமார் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆத்திரம் அடைந்த குமார் திடீரென புஷ்பகாந்தன் மற்றும் அவரது மனைவி வசந்தியை தாக்கி தள்ளினார். இதில் நிலைதடுமாறிய வசந்தி வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி கீழே வந்து விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த வசந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மோதலில் அவரது கணவர் புஷ்பகாந்தனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இன்று காலை வசந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர் மீரா கொலை வழக்காக மாற்றி குமாரை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

வீட்டு முன்பு செருப்பு வைத்த தகராறில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News