தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வை வீழ்த்த த.வெ.க.வால் மட்டுமே முடியும் - விஜய்

Published On 2026-02-02 14:56 IST   |   Update On 2026-02-02 14:56:00 IST
  • நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் சினிமாவை விட மாட்டேங்கிறீங்களே.
  • தீயசக்தியை வீழ்த்துவதற்கு தூய சக்தியான நம்மால் மட்டுமே முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத் தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமை உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா. இன்றைக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு கட்சியாக நாம் வளர்ந்திருக்கிறோம் என்றால் அது உங்களால்தான். மேலும் நம்மை நேசிக்கிற கோடிக்கணக்கான மக்களும் தான் அதற்கு ஒரு மிக முக்கிய காரணம். உங்களை நம்பிதான் நானும், நம்ம கட்சியும் இருக்கிறோம்.

நம் கட்சியில் இருக்கிற தோழர்களுக்கும், தொண் டர்களுக்கும் இந்த கட்சியின் தலைமை தொண்டனான என்னுடைய வாழ்த்துகள்.

1977-ம் ஆண்டு ஜூன் மாதம் எம்.ஜி.ஆர். ரேடியோவில் ஒரு பேட்டி கொடுத்தார். அதில் பேசும்போது பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கிற ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதே என்று எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன். அன்றைக்கு அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் என்று சொன்னார்.

அதே மாதிரி 2017-ம் ஆண்டுக்கு அப்புறம் 2021-க்கு அப்புறம் தமிழ்நாட்டின் நிலைமையை பற்றி யோசித்து பார்த்த நமது தமிழக மக்கள் காமராஜர் இருந்த இடத்தில், அண்ணா இருந்த இடத்தில், எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதே என்று கண்ணீர் வடித்தார்கள். இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம்.

இப்படியெல்லாம் நாம் பேசுவதால் சில பேர் கொந்தளிப்பார்கள். அது பற்றி நாம் கவலைப்படக்கூடாது. ஏனென்றால் கொந்தளிப்பது தான் அவர்களின் வேலையே.

எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது, ஏன்? ஜெயித்த பிறகு சட்டசபையில் கூட ஏதோ ஒரு நடிகர் கட்சி வந்திருக்கிறதாம். ஏதோ ஒரு புதிய கட்சி வந்திருக்கிறது. புரட்சி தலைவர்னு ஒருத்தர் வந்திருக்கிறார் என்றெல்லாம் கேலி, கிண்டல் செய்தனர்.

அதன்படி யார் அரசியலுக்கு வந்தாலும் இப்படி கொந்தளிப்பதுதான் அவர்களுக்கு வேலையே. நாம் அரசியலுக்கு வந்த பிறகு கூட விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது? எம்.ஜி.ஆருக்கு எவ்வளவு அனுபவம் இருந்தது தெரியுமா?

1952-ல் இருந்து 1972 வரைக்கும் தி.மு.க.வில் இருந்த அவருக்கு அரசியல் அனுபவம் எவ்வளவு இருக்கிறது தெரியுமா? விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது என்று பேசிய அதே வாய்தான் அன்றைக்கு எம்.ஜி.ஆரை பார்த்து அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்.

கவர்ச்சியை மட்டுமே நம்பி இருப்பவர். அட்டக்கத்தி, வாய் விளம்பர வள்ளல், இவருக்கு கேள்வி மட்டும்தான் கேட்க தெரியும். பதில் சொல்ல தெரியாது. நிருபர்களை சந்திக்க மாட்டார். டெல்லியை பகைத்துக் கொள்ள மாட்டார். மேலே இருந்து அவருக்கு அவ்வளவு அழுத்தம் இருக்கிறது என்று சொன்னதும் அதே வாய் தான்.

அதனால் எம்.ஜி.ஆரை மட்டும் அல்ல, அவரது தொண்டர்களையும் விட்டு வைக்கவில்லை. பளபளப்பு, ஜொலி ஜொலிப்பை பார்த்தால் பல் இளிப்பவர்கள் என்று கிண்டல் செய்தனர். இதை மக்கள் அமைதியாக கவனித்து என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

அவர் ஜெயித்ததுக்கு அப்புறம் அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்ட அனுபவசாலிகள் இருப்பார்கள் என்று சொல்வாங்கல்ல, அவர்கள் அனைவருக்கும் கோட்டை என்பது பகல் கனவாகவே மாறி விட்டது.

1977-ம் ஆண்டு போலவே அதே பழைய ஆயுதத்தை இப்பவும் கையில் எடுக்கிறார்கள். டெக்னாலஜி வளர்ந்து வேறெங்கோ போய்க் கொண்டிருக்கிறது. உங்க டெக்னிக்கையாவது மாத்துங்க பாஸ். காமராஜரையும் விட்டு வைக்கவில்லை. அவரைப் பற்றியும் கிண்டல் கேலி செய்து கொந்தளித்தனர்.

அவர்கள் செய்யும் ஊழல் பற்றி நாம் எடுத்து சொன்னால் 50 வருடத்துக்கு முன்னாடி இருக்கிற அதே தகர டப்பாவை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுவார்கள். பவள விழா பாப்பாவுக்கு வேறு என்ன தெரியும்? பழைய டப்பாவை உருட்ட தானே தெரியும். அதுக்காக நாம் அவர்கள் செய்யும் தப்பை வெளியில் சொல்லாமல் இருக்க முடி யுமா? சொல்லுவோம். சொல்லிக் கொண்டே இருப்போம்.

நம்மை தவிர அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க யாருக்கு தில் இருக்கிறது. மக்களின் ஒரே பிரதிநிதி நாம் மட்டும்தான்.

இந்த டிஜிட்டல் உலகத்தில் திருவள்ளுவர் இருந்திருந்தால் இந்த தீய சக்தியை பற்றி என்ன திருக்குறள் எழுதி இருப்பார். ஒரு கற்பனையா "அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க. முதற்றே உலகு" என்று எழுதி இருப்பார்.

மும்முனை போட்டி, 4 முனை போட்டி என்று சொல்கிறார்கள். அவர்களை பொறுத்தவரைக்கும் அப்படியே இருக்கட்டும். மாபெரும் மக்கள் சக்தியாக நம்ம அணி ஒரு பக்கம். அடுத்து தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம்.

அடுத்து பா.ஜ.க. தலைமையில் மற்றும் பலர். என்னப்பா சிரிக்கிறீங்க உண்மையை தானப்பா சொன்னேன்.

இப்படி எத்தனை சக்திகள், எத்தனை பேர் வந்தாலும் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். நம்ம த.வெ.க.வால் மட்டுமே முடியும். இப்படி இருக்கிற இந்த நிலைமையில் ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா, ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா இப்படியெல்லாம் கேட்கும்போது எனக்கு என்ன தோணுகிறது என்றால் அய்யய்யோ இவங்க ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற ஒவ்வொரு விஜய்யையும் கூப்பிடுகிற மாதிரி எனக்கு தோணுது. பொறுங்க பாஸ் வருவார்கள். முறையாக வருவார்கள்.

ஓட்டு போடும் அன்றைக்கு வாக்காளர் அடையாள அட்டையை கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டில் இருக்கிற ஒவ்வொரு விஜய்யும் ஒவ்வொரு விஜியும் பூத்து பூத்தா காலையிலேயே வந்து நிப்பாங்க பாருங்க. அன்னைக்கு தெரியும் பாருங்க. ஏண்டா இந்த விஜய்யை கூப்பிட்டோம்னு.

இப்படி பேசினால் சினிமாவா இது என்று ஆரம்பித்து விடுவார்கள். நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் சினிமாவை விட மாட்டேங்கிறீங்களே.

கருத்து கணிப்பில் நிறைய பேர் உண்மையான கருத்து கணிப்பை சொல்கிறார்கள். அதை நான் தப்பு சொல்லலை. சிலருடைய கடுப்பில் விட்ட கணிப்பாகவும் இருக்கிறது. அதற்கும் நான் தப்பு சொல்லவில்லை. கடுப்பில் விட்ட கணிப்பாளர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், ஒவ்வொரு ஊர் ஊரா, தெரு தெருவா, வீடு வீடா போய் கருத்து கணிப்பு எடுத்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் த.வெ.க. இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

ஒருவேளை அது உங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தால் ரப்பர் வச்சி எல்லாவற்றையும் அழித்து விட்டு மறுபடியும் முதலில் இருந்து எடுக்க பாருங்கள். அதே ரிசல்ட்தான் வரும்.

அது என்ன லாஜிக், எல்லார் வீட்டிலும் த.வெ.க. இருக்கும் என்று கேட்டால் ஒரு சின்ன டெஸ்ட் ஒன்று பண்ணி பாருங்களேன். நம்ம சி.எம். ஸ்டாலின் சார் இருக்காங்கள்ல, 2 வருடத்துக்கு முன்னாடி இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு மேடையில் பேசும்போது சொன்னார். அவங்களுடைய கட்சிகாரங்க, ஒரு சில மந்திரிகள் செய்கிற அட்ரா சிட்டியை பார்த்து ராத்திரியில் எனக்கு தூக்கமே வர மாட்டேங்கிறது என்று பேசினார். அப்படி இருக்கிற அவர் என்றைக்காவது ஒரு நாள் அசந்து தூங்குவார். அப்போது அவரிடம் போய் சார், எந்த சின்னத்துக்கு சார் ஓட்டு போடுவீங்க அப்படின்னு கேட்டு பாருங்க... விசில் சின்னத்துக்கு தான்.... தூக்கத்தில் இப்படி எழுப்பி கேட்டால் உண்மையை போட்டு உடைத்து விடுவார். அப்படி இருக்கிற இந்த நிலைமையிலும் த.வெ.க. சிட்டியில்தான் இருக்கிறது. டவுனில்தான் இருக்கிறது.

கிராமங்களில் இல்லை என்று சொல்பவர்களுக்கு இப்படி சில டெஸ்ட் பண்ணி பார்த்தால் தெரியும். விசில் சின்னம் போகாத ஊரே இல்லை. விசில் சின்னம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் த.வெ.க. இருக்கிறது என்று அர்த்தம். என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள், அண்ணன், தம்பிகள், த.வெ.க.வுக்கு ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது.

ரத்த சொந்தமாக நினைக்கிற நம்ம வகையறாக்களை எந்த கட்சியாலும், எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கவே முடியாது. இதுதான் களநிலவரம். தீயசக்தியை வீழ்த்துவதற்கு தூய சக்தியான நம்மால் மட்டுமே முடியும்.

இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.தான் மக்களின் ஒரே ஆப்சன். டப்பா என்ஜின், ஓட்டை என்ஜின், எவ்வளவு என்ஜின் வந்தாலும் டாப் என்ஜின் நம்ம த.வெ.க.தான் என்று மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள்.

நமது தோழர்கள் அதை மனதில் நன்றாக ஏற்றிக் கொண்டு இன்னும் இன்னும் ஷார்ப்பா வேலை பாருங்கள். நம்முடைய வேட்பாளர்களுடன் ஒற்றுமையாக இருந்து வேலை செய்யுங்கள். நம்முடைய விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைப்பது மட்டும் தான் உங்கள் வேலை. மாற்றத்தை யெல்லாம் மக்களுடன் சேர்ந்து நான் பார்த்துக் கொள்கிறேன். மக்கள் விசிலை ஊதுகிற ஊதலில் இந்த தீயசக்தியும், இந்த ஊழல் சக்தியும் தெறித்து ஓட வேண்டும். அன்றைக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் த.வெ.க. ஆளும் கட்சியாக எழும். உங்களுடன் நான் இருக்கிறேன். நம்மளுடன் நம்ம மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேணும். நம்பிக்கையாக இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News