தமிழ்நாடு செய்திகள்

பெரியநாயக்கன்பாளையத்தில் மனைவி-மகளுடன் மின்வாரிய அதிகாரி தற்கொலை

Published On 2026-02-02 14:05 IST   |   Update On 2026-02-02 14:05:00 IST
  • கமலேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார்.
  • நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார்.

கவுண்டம்பாளையம்:

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள சாந்திமேடு தம்புநகர் பகுதியில் வசித்தவர் கமலேஷ் (வயது 48). இவர் கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இலக்கியா. இவர்களது மகள் யாஷிகா (10). 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

கமலேசின் மனைவி இலக்கியாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் பாதிப்பு குறையவில்லை என தெரிகிறது. இதனால் கமலேசும், அவரது மனைவியும் மனவேதனையில் இருந்துள்ளனர். இதனால் கமலேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 3 பேரும் துடிதுடித்து இறந்துள்ளனர்.

இதற்கிடையே கமலேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். தனது மனைவியின் உடல்நல பாதிப்பு சரியாகாததால் குடும்பத்துடன் தற்கொலை செய்யப்போவதாக வீடியோவில் பேசி உள்ளார். பின்னர் வீடியோவை அந்த பகுதியில் உள்ள ஒருநபருக்கு அனுப்பி இருக்கிறார்.

இரவு வெகுநேரத்துக்கு பிறகு வீடியோ அனுப்பியதால் அந்த நபர் உடனடியாக வீடியோவை பார்க்கவில்லை. இன்று அதிகாலை தான் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையில் கமலேசும், அவரது மனைவி மற்றும் குழந்தை வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியின் நோய் பாதிப்பு காரணமாக தான் அவர்கள் இறந்தார்களா அல்லது எதற்காக அவர்கள் தற்கொலை செய்தனர் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News