உள்ளூர் செய்திகள்

டெல்லி விமானத்தில் அவசரகால கதவை திறந்த வாலிபரால் பரபரப்பு

Published On 2024-02-14 10:04 GMT   |   Update On 2024-02-14 10:04 GMT
  • அவசரகால கதவை திறந்தது யார்?என்பது குறித்து விசாரித்தனர்.
  • சென்னையில் ஒரு பணியில் சேர்வதற்கான நேர்முக தேர்வில் பங்கேற்க சரோஸ் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளார்.

ஆலந்தூர்:

டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் 159 பயணிகள் இருந்தனர். விமானத்தை விமானி இயக்க ஆரம்பித்த போது திடீரென, விமானத்தின் அவசரகால கதவை திறக்கக்கூடிய அலாரம் ஒலித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை இயக்காமல் நிறுத்தினர். மேலும் அவசரகால கதவை திறந்தது யார்?என்பது குறித்து விசாரித்தனர்.

அப்போது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சரோஸ்(27) என்பவர் அவசர கால கதவை திறந்து இருப்பது தெரிந்தது. விசாரணையில் அவசரகால கதவை திறக்க வேண்டும் என்று அதில் இருந்த பட்டனை அழுத்தவில்லை. அந்த பட்டன் வித்தியாசமாக இருந்ததால், அதை தெரியாமல் நான் அழுத்தி விட்டேன். முதல் முறையாக விமான பயணம் மேற்கொள்வதால், எனக்கு அது அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் என்று தெரியாது என்றார்.

எனினும் விமானிகள் அவருடைய விளக்கத்தை ஏற்கவில்லை. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் சரோசின் விமான பயணத்தை ரத்து செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்த அழைத்து சென்றனர்.

சென்னையில் ஒரு பணியில் சேர்வதற்கான நேர்முக தேர்வில் பங்கேற்க சரோஸ் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளார். வரும்போது ரெயிலில் வந்த அவர் திரும்பி செல்லும் போது விமானத்தில் டெல்லிக்கு பயணம் செய்ய இருந்தார். முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தபோது தெரியாமல் அவசர கால கதவு பட்டனை அழுத்தி தற்போது விசாரணையில் உள்ளார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் அந்த விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

Tags:    

Similar News