- கார் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடியில் ஒரு வீட்டில் விஷேச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு மதிய விருந்திற்கு பிரியாணி ஆர்டர் கொடுத்திருந்தனர். அதன்படி கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள பிரியாணி கடையிலிருந்து ஒரு பெரிய அண்டாவில் பிரியாணியை ஏற்றிக்கொண்டு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
காரை அன்வர்அலி (வயது55) என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. அதனை தொடர்ந்து கார் தீப்பிடித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் அன்வர்அலி காரில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் சமயபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.