உள்ளூர் செய்திகள்
ரெயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
- ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் தப்பியோடிய கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்கு தினந்தோறும் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து ரெயிலில் சோதனை மேற்கொண்ட ரெயில்வே போலீசார் அதில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 400 கிலோ எடையுள்ள 20 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திராவிடம் அரிசி மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் தப்பியோடிய கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.