உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் -நம்பியூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

Published On 2023-05-11 16:39 IST   |   Update On 2023-05-11 16:39:00 IST
  • அந்தியூரில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை, சூறாவளி காற்றுடன் மழையும் பெய்தது.
  • அத்தாணி, சின்னத்தம்பி பாளையம், நகலூர், எண்ணமங்கலம், கோவிலூர், செல்லம்பூர், அம்மன் கோவில், விராலி காட்டூர் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றடன் பலத்த மழை பெய்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, பவானி, கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதேபோல் மாவட்டத்தின் முக்கிய அணைகளான பவானிசாகர், வரட்டுபள்ளம், குண்டேரி பள்ளம், கொடிவேரி அணை போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தாளவாடி மலைப்பகுதியில் கடந்த 6 நாட்களாக இரவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவும் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு 11 மணிக்கு மேல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

கோபி அருகே உள்ள கூகலூரில் நேற்று இரவு 10 மணிக்கு பிறகு சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தன. கூகலூர் குளம் அருகே 4-வது வார்டில் உள்ள மின் கம்பம் முறிந்து கீழே விழுந்தது.

இதனால் நேற்று இரவு அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. விடிய விடிய மின் வினியோகம் இல்லாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதேப்போல் நம்பியூரிலும் இரவு நேரத்தில் சூறாவளியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அந்தியூரில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை, சூறாவளி காற்றுடன் மழையும் பெய்தது. குறிப்பாக அத்தாணி, சின்னத்தம்பி பாளையம், நகலூர், எண்ணமங்கலம், கோவிலூர், செல்லம்பூர், அம்மன் கோவில், விராலி காட்டூர் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றடன் பலத்த மழை பெய்தது.

இதில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த கதலி, செவ்வாழை, பூவன் உள்ளிட்ட வாழை மரங்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை முற்றிலும் முறிந்து விழுந்தன. இதனால் ரூ.10 லட்சத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல் அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரிகரையொட்டி ஆலாம்பாளையம், ஜெ.ஜெ. நகர் செல்லும் தார்சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரம் ஏராளமான மரங்கள்உள்ளன. நேற்று மாலையில் இந்த பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல் சூறாவளி காற்று காரணமாக அந்தியூர் பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த வெற்றிலை கொடிகளும் சேதமடைந்தது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

நம்பியூர்-15, கோபி-10.20, சென்னிமலை-10, எலந்தகுட்டைமேடு-7.80, சத்தியமங்கலம்-7.

Tags:    

Similar News